பூமரம்
இத்தனை கோடி சொற்கள் இருக்கையில்
மௌனம் தேர்ந்தெடுத்தாய்!
அத்தனை அழகாய் இதழ்கள் கொண்டும்
பேசாமல் புன்னகைத்தாய்!
தேனீக்கள் உரையாடும் உன்னோடு ரீங்காரமாய்!
என் பாமர காதுகளுக்கேன்
உன் குரல் கேட்பதில்லை?
ஒளிக்கு ஒளி சேர்க்கும் உன் வண்ணத்தின்
வார்த்தைகளை, விழி மூடி
மொழியாக்க விழைகிறேன்!
நீ காற்றில் தவழவிடும் மணமென்னும்
கவிதை தனை
சுவாசத்தில் சேகரித்து திரிகிறேன்!
இளவேனில் மாலைகளில்
வழி மறித்து சிரிக்கிறாய், இசைபாடி
நடமாடி உதிர்வது போல் நடிக்கிறாய்!
கனியாகி, விதையாகி, மரமாகி, நகர்கிறாய்!
பகராமல் ஏதோ விளங்கிவிட
அசையாமல் வாயடைத்து நிற்கிறேன் நான்!
- அனுராதா சாயிநாதன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக